Sunday, June 20, 2010

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !


அநீதி:


நீதிமன்றங்களில் நீதி கிடைப்பது போலவே அநீதியும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்பதன் இந்த வார அடையாளம்தான் போபால் வழக்குத் தீர்ப்பு.

1984ல் டிசம்பர் 2 நள்ளிரவில் அமெரிக்கக் கம்பெனியான யூனியன் கார்பைட் ஆலையிலிருந்து விஷவாயு கசிந்ததில் அடுத்த மூன்றே நாட்களில் 8 ஆயிரம் பேர் இறந்தார்கள்மொத்தமாக 20 ஆயிரம் பேர் சாவு. ஐந்து லட்சம் மக்களுக்கு கண், நுரையீரல் பாதிப்புகள். தலைமுறை தலைமுறையாக குடும்பங்கள் சிதைந்துகொண்டிருக்கின்றன.

அலட்சியத்தால் இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் என்று எட்டு இந்தியர்களை இப்போது போபால் நீதிமன்றம் தண்டித்திருகிறது. இதில் ஒருத்தர் வழக்கு நடந்த 25 வருடங்களில் செத்தே போய்விட்டார். தண்டனை வெறும் இரண்டு வருடங்கள்.

ஐந்து லட்சம் பேர் பாதிப்புக்கு 2350 கோடி ரூபாய் நஷ்ட ஈடு அளித்துவிட்டு யூனியன் கார்பைட் ஓடிவிட்டது. அதன் தலைவர் அமெரிக்கர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்ட உடனே ஜாமீனில் வந்து அமெரிக்காவுக்கு ஓடிப்போனவர்தான். மத்தியப்பிரதேச அர்ஜுன்சிங் அரசின் தயவில் விமானத்தில் டெல்லிக்கு ஓடிய ஆண்டர்சன் அங்கே ஜனாதிபதி ஜெயில் சிங்குடன் டீ குடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் போனார். திரும்பி வரவே இல்லை.

இந்திய அரசு - ராஜீவ்,வி.பி.சிங்,சந்திரசேகர்,குஜ்ரால்,தேவ கவுடா,நரசிம்மராவ்,வாஜ்பாயி,மன்மோகன்சிங் எந்தப் பிரதமரும் சரி அமெரிக்காவிலிருந்து ஆண்டர்சனைக் கொண்டு வரமுடியவில்லை. அமெரிக்க அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. நடுவில் 2002ல் வாஜ்பாயி அரசு ஆண்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது தரவேறு முன்வந்தது !

யூனியன் கார்பைட் அதிகாரிகள் மீது கொலைக்குற்றம் போட்டிருந்ததை, அலட்சியக் குற்றமாக உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி மாற்ற உத்தரவிட்டார். அதனால்தான் அதிகபட்ச தண்டனை வெறும் இரு வருடங்கள் !

இந்த மாதிரி ஒரு கொடூர விபத்து அமெரிக்காவில் நடந்திருந்தால் பல லட்சம் கோடி நஷ்ட ஈடு தரவேண்டியிருக்கும். குற்றவாளிகள் சாகும்வரை சிறைவாசம்தான். அலாஸ்காவில் 1989ல் நடந்த எண்ணெய்க் கசிவு விபத்தில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. அதற்கே எக்சான் கம்பெனி 2500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டிஇருந்தது.

இந்திய அரசு அமெரிக்க முதலாளிகளின் அடியாளாக வேலை செய்கிறது. இதுவரை இருந்த அடியாட்களிலேயே ரொம்ப ரொம்ப விஸ்வாசமானவர் மன்மோகன்சிங்தான். போபால் தீர்ப்பு அநியாயமானது என்று சட்ட அமைச்சர் மொய்லி சொல்கிறார். பிரதமர் வாயையே திறக்கவில்லை. இப்போது இந்தியாவில் அணு உலைகளை ஏற்படுத்த அமெரிக்கா உட்பட மேலை நாடுகளின் முதலாளிகளை அவர் அரசு அழைத்திருகிறது.

இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், கொடுக்க வேண்டிய அதிகபட்ச நஷ்ட ஈடுத்தொகையைக் குறைத்து சட்டம் போட முயற்சிக்கிறது மன்மோகன் அரசு. அது மட்டுமல்ல, விபத்துக்கு, அணு உலையின் சாதனங்களை சப்ளை செய்த உற்பத்தியாளர்களுக்கு பொறுப்பு உண்டு என்ற பிரிவை நீக்கவும் இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில்தான் போபால் தீர்ப்பு வந்திருக்கிறது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !

No comments:

Post a Comment